புதுடெல்லி: ஜப்பான் நாட்டின் ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் சாம்பல், நேதாஜியுடையது தானா என்பதைக் கண்டறிய மரபணு சோதனை (டிஎன்ஏ) நடத்த வேண்டும் என்று நேதாஜியின் மகள் டாக்டர் அனிதா போஸ் வலியுறுத்தி உள்ளார்.
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்டது. இதற்கிடையே, ஜெர்மனியில் வசிக்கும் நேதாஜியின் ஒரே வாரிசான அனிதா போஸ், அங்கிருந்து பி.டி.ஐ. செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், ''தைவானின் தைபே நகரில் கடந்த 1945-ம் ஆண்டு நேரிட்ட விமான விபத்தில் எனது தந்தை நேதாஜி உயிரிழந்து விட்டார் என்பதை நான் நம்புகிறேன்.
அதே நேரம், ஜப்பானின் ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டிருக்கும் நேதாஜியின் சாம்பல் என்று கூறப்படும் சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போதுதான், அந்த சாம்பல் நேதாஜியுடையது தானா என்பது உறுதியாகத் தெரிய வரும்.
நேதாஜி தொடர்பாக இந்திய அரசிடம் இருந்த 100 ரகசிய ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் சில ஆவணங்களை மட்டுமே நான் பார்த்துள்ளேன். அதில், நேதாஜியின் மரணம் தொடர்பான சான்றிதழ் இல்லாதது ஆச்சரியமளிக்கிறது.
நேதாஜி தொடர்பான ஆவணங்களை இந்திய அரசும், மேற்குவங்க அரசும் வெளியிட்டிருப்பதால், அவர் தொடர்பான ரகசியங்கள் முழுவதும் வெளிவருமா எனக் கேட்கிறீர்கள். அவ்வாறு வெளிவந்தால், எனக்கு மகிழ்ச்சிதான். எனது தந்தை நேதாஜி குறித்து புத்தகம் எழுதும் திட்டமில்லை. ஆனால், எனது தாயார் எமிலி குறித்து புத்தகம் எழுத உள்ளேன்" என்றார்.
இந்நிலையில், அனிதா போஸ் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, ரங்கோஜி கோயிலில் வைக்கப்பட்டுள்ள நேதாஜியின் சாம்பல் என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை நடத்துவது குறித்து ஜப்பான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார் என்று தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment